ரஷ்யாவில் வாக்னர் குழு என்ற அமைப்பே இல்லை - டுவிஸ்ட் அடிக்கும் புதின்!
ரஷிய நாட்டில் வாக்னர் குழு என்ற ஒரு அமைப்பே இல்லை என்று புதின் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
போர்
கடந்த ஒன்றரை வருடமாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தி வருகிறது, இதனை தடுக்க பல நாடுகள் முயன்றபோதும் இந்த போர் நீடித்து கொண்டே வருகிறது. அச்சமயத்தில் ரஷிய படைகளுடன் இணைந்து தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு செயல்பட்டு வந்தது.
உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றுவதில் இந்த குழு முக்கிய பங்குவகித்தது. சமீபத்தில் இந்த குழு ரஷிய நாட்டிற்கு எதிராக திடீர் புரட்சியில் ஈடுபட்டது. பின்னர் அந்த கூலிப்படையுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததால் ஓரிரு நாட்களிலேயே இந்த புரட்சி முடிவுக்கு வந்தது. மேலும், அந்த குழு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கூறினர்.
புதின் பேட்டி
இந்நிலையில், ரஷிய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் அதிபர் புதின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் ரஷ்யாவில் வாக்னர் குழு என்ற அமைப்பு இல்லை என்று கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், "ரஷியாவில் தனியார் ராணுவ அமைப்புகளுக்கு எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை. எனவே வாக்னர் குழு என்ற அமைப்பு இல்லை" என்று தெரிவித்திருந்தார்.