மாங்கல்யம் சர்ச்சை; மோடிக்கு தாலியின் முக்கியத்துவம் தெரியுமா? பிரியங்கா காந்தி விளாசல் !
பிரதமர் மோடியின் மாங்கல்யம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
பிரியங்கா விளாசல்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி நிறைவடைந்த நிலையில், 2வது கட்ட வாக்குப்பதிவுகான 88 தொகுதிகளில் விரைவில்க நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸும், பாஜகவும் தீவிர பரப்புரை செய்து வருகின்றனர். அதன்படி, அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு இருந்தது.
உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா? என் பாட்டி தனது தாலியைப் போருக்காகக் கொடுத்தார். என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். உண்மை என்னவெனில், இவர்களால் (பாஜக) பெண்களின் போராட்டத்தைப் புரிந்துகொள்ள முடியாது.
மாங்கல்யம் சர்ச்சை
'மங்கள்சூத்திரத்தின்' முக்கியத்துவத்தை மோடிஜி புரிந்துகொண்டிருந்தால், இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார்” இவ்வாறு அவர் பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்.
முன்னதாக ராஜஸ்தானில் பரப்புரையாற்றிய மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன்பொருள், அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.
நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது.
அப்படியென்றால், உங்கள் வளங்கள் யாருக்குப் போகப்போகிறது. இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக்கூட விட்டுவைக்காது” என்று கூறியிருந்தார். இந்த உரை மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது. அவரது இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது.