அணியில் இடமில்லை: கண்ணீர் விழுத அழுததாக ப்ரித்வி ஷா உருக்கம்
இளம் வீரரான ப்ரித்வி ஷா இந்திய அணியில் கிடைக்காததால், அறைக்குள் சென்று அழுததாக கூறியுள்ளார். இந்திய அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷா, அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்று அனைவராலும் புகழப்பட்டார். அந்தளவிற்கு அவரின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. இதன் காரணமாக அவருக்கு அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகியும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அவருக்கு அடுத்து இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து தற்போது விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் 7 போட்டிகளில் 754 ஓட்டங்கள் எடுத்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில், தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து கூறுகையில், அன்று நான் டென்ஷனாக இருந்தேன். எதற்குமே உபயோகமற்றவனாக உணர்ந்தேன்.
நான் என் அறைக்குச் சென்று மனம் உடைந்து அழுதேன். ஏதோ தப்பாக நடப்பது போல தெரிந்தது. அந்த தவறுக்கான பதிலை உடனடியாக நான் தேடியாக வேண்டும் என்று முடிவு செய்ததாக கூறியுள்ளார்.