தேமுதிகவைக் கரைத்த பிரேமலதா - கட்டம் கட்டி அடிக்கும் அதிமுக

Tamil nadu ADMK DMDK Premalatha Vijayakanth
By Jailany Jun 02, 2025 01:30 PM GMT
Report

2011ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகிக் கொண்டிருந்த போது அதிமுகவின் அப்போதைய பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடமிருந்து வந்த அறிக்கை ஒன்று அரசியலை உற்று நோக்குபவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

premalatha vijayakanth

அதிமுக வேட்பாளர் பட்டியல் எனக்குத் தெரியாமல் வெளியாகி விட்டது என்றார் ஜெயலலிதா. தேமுதிகவை கூட்டணியில் தக்க வைக்க வேண்டும் என்பதே அந்த அறிக்கைக்கு முக்கிய காரணம்.

தனது ஆளுமைக்கு எந்த குறையும் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஜெயலலிதா தன் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தனக்கு தெரியாமல் வெளியானது என்று பொதுவெளியில் சொன்ன அளவிற்கு தேமுதிகவின் முக்கியத்துவம் அன்று இருந்தது.  

இன்று?

ஐந்து ஆண்டுகளாக மாநிலங்களவை இடத்திற்காக அதிமுகவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது தேமுதிக. 2024 தேர்தலில் அதிமுகவோடு வேறு எந்தக் கட்சியும் கூட்டணி வைக்காத சூழலில் கைகொடுத்த தேமுதிகவை எடப்பாடி பழனிசாமி ஏன் காக்க வைக்கிறார்?

அன்புமணி, ஜி.கே.வாசன் இரண்டு பேரிடம் கிடைத்த அனுபவங்களில் இப்போது தேமுதிகவிற்கு சீட் தர எடப்பாடி மறுக்கிறார் என்ற வாதங்களில் நியாயமிருக்கிறது. ஆனால் தேமுதிகவை விட குறைந்த மக்கள் செல்வாக்கு கொண்ட ஜி.கே. வாசனுக்கு சீட் கொடுத்த போதே தேமுதிகவை அதிமுக புறக்கணிக்க காரணம் தேமுதிகவின் அதற்கு முந்தைய செயல்பாடுகள். 

தேமுதிகவைக் கரைத்த பிரேமலதா - கட்டம் கட்டி அடிக்கும் அதிமுக | Premalatha Vijayakanth Is Reason For Dmdk State

இரண்டு இடங்களில் கூட்டணி பேரம் பேசுவது, நிலையற்றத் தன்மை என தமிழ்நாடு அரசியலில் தேமுதிக நம்பகத்தன்மை இல்லாத கட்சியாகவே மாறியது. அதற்கு சரியான உதாரணம் 2019 மக்களவைத் தேர்தல். அன்றைய ஆளும்கட்சியான அதிமுக பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது.

பாஜகவிற்கு ஐந்து இடங்களும், பாமகவிற்கு ஏழு மக்களவை, ஒரு மாநிலங்களவை என ஒதுக்கீடு முடிந்த நிலையில் தேமுதிகவும் பாமக கேட்ட அளவிற்கான இடங்களை டிமாண்ட் செய்தது. இந்தக் காலகட்டத்தில் விஜயகாந்தை வீட்டிற்கு சென்று பார்த்த ஸ்டாலின் தேமுதிகவின் டிமாண்டை அதிகப்படுத்தி விட்டார். இதனால் பாமகவிற்கு ஒதுக்கியது போன்று ஏழு மக்களவை இடங்களும்,

ஒரு மாநிலங்களவை இடங்களும் தேமுதிகவிற்கு ஒதுக்க வேண்டிய ஒரு நிர்பந்தம் அதிமுகவிற்கு உண்டானது. அப்படி ஒதுக்கினால், அதிமுக போட்டியிடும் இடங்கள் குறையும் என்பதால் ஐந்து மக்களவை இடங்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடத்தில் தேமுதிகவை சுருக்க பேச்சுவார்த்தை நடத்தியது அதிமுக.  

அதிமுகவோடு பேச்சுவார்த்தை நடத்த சுதீஷை அனுப்பிய அதே நேரத்தில் அப்போதைய திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்கும் சில தேமுதிக நிர்வாகிகள் அனுப்பப்பட்டனர். அந்த விவகாரத்தை ஊடகங்களில் போட்டு உடைத்த துரைமுருகன், தேமுதிகவை கூட்டணியில் சேர்த்தால் அவர்களுக்கு கொடுக்க எங்களிடம் சீட் இல்லை என்றார். இந்த விவகாரத்தினால் டிமாண்ட் செய்யும் இடத்தில் இருந்த தேமுதிக கொடுப்பதை வாங்கிக் கொள்ளும் இடத்திற்கு வந்து சேர்ந்தது.

அதிமுகவுடன் கூட்டணி? செக் வைத்த பிரேமலதா - நன்றி கூறி திமுகவுடன் நெருக்கம்!

அதிமுகவுடன் கூட்டணி? செக் வைத்த பிரேமலதா - நன்றி கூறி திமுகவுடன் நெருக்கம்!

மாநிலங்களவை இடத்தை மறுத்த அதிமுக நான்கு மக்களவை தொகுதிகளை மட்டும் தேமுதிகவிற்கு ஒதுக்கியது. 2016ல் கடைசி வரை தங்களிடம் பேசி விட்டு கூட்டணிக்கு வராமல் ஏமாற்றிய தேமுதிகவை ஸ்டாலினும் துரைமுருகனும் பழிவாங்கியிருந்தனர். 2020, ஆண்டு நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக எவ்வளவோ முயற்சித்தும் அதிமுக வாய்ப்பு வழங்கவில்லை.

தங்களுடன் கூட்டணி பேசிக் கொண்டே திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்கு கூட்டணி பேச ஆளனுப்பிய தேமுதிகவை நம்பகமான கட்சியாக அதிமுக பார்க்கவில்லை. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை முறித்து வெளியேறியது தேமுதிக. திமுக ஆட்சி அமைந்த பின்னர் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்தது தேமுதிக.

2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வலுவாக இருந்த சூழலில் இன்னொரு பக்கம் பாஜகவும் பாமக உள்ளிட்ட நிறைய கட்சிகளைச் சேர்த்து கூட்டணி அமைத்தது. அதிமுகவுடன் யாரும் கூட்டணி வைக்க முன்வராத சூழலில் தேமுதிக கைகொடுத்தது. ஒருவேளை அதிமுக தேமுதிக இணையவில்லை என்றால் 40 தொகுதிகளிலும் இரட்டை இலையில் போட்டியிட வேண்டிய சூழல் உருவாகியிருக்கும். அப்போதே ஒரு மாநிலங்களவை இடம் கொடுப்பதாக அதிமுக உறுதியளித்ததாக கூறப்பட்டது. தேமுதிகவின் சுதீஷ் தனிப்பட்ட முறையில் பத்திரிகையாளர்களிடம் அதனை தெரிவித்தார்.  

2025ல் நடக்கும் மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவிற்கு இடம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அமைதியாகவே இருந்த அதிமுக இப்போது சீட்டை மறுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் 2026 மார்ச்சில் அதாவது சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பின் போது நடக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் தரப்படும் என அறிவித்துள்ளது.

ஒருவேளை இப்போது வாய்ப்பு வழங்கி தேர்தல் நேரத்தில் கூட்டணியை முறித்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்திலேயே இந்த முடிவை அதிமுக எடுத்ததாக கூறப்படுகிறது. தேமுதிகவிற்கு ஒரு வகையில் செக் வைத்திருக்கிறது அதிமுக. 2026ல் கூட்டணியில் இடம்பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் மட்டுமல்ல. வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச முடியாத சூழலுக்கும் தேமுதிக தள்ளப்பட்டிருக்கிறது.

நம்பகத்தன்மை இல்லாத கட்சி என்று பெயர் எடுக்கும் அளவிற்கான செயல்பாடுகள், கட்சியின் உண்மையான பலம் அறியாமல் பொதுவெளியில் மற்றக் கட்சிகளை எடுத்தெறிந்து பேசுவது எல்லாம் சேர்த்து தேமுதிகவை  இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன.

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் சமயத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போது, கூட்டணிக்காக தேமுதிகவின் கால்களில் எல்லாக் கட்சிகளும் விழுவதாக பேசினார் விஜயபிரபாகரன். அதற்கு முந்தைய தேர்தலில் தேமுதிக பெற்றது வெறும் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே.

 விஜயகாந்த் ஆக்டிவாக இருக்கும் போது தேமுதிகவின் வாக்கு சதவீதம் இரண்டாக சரிந்து விட்டது. ஆனால் இன்னும் 2009ல் பெற்ற 10 சதவீதத்தை மனதில் வைத்தே செயல்பட்டு வருகிறார் பிரேமலதா. 2024 மக்களவைத் தேர்தலில் விஜயகாந்தின் மரணத்தினால் ஏற்பட்ட அனுபவம் தேமுதிகவிற்கு வாக்குகளைப் பெற்றுத் தந்தது.

இரண்டு தேர்தல்களுக்கு அனுதாபம் தொடர வாய்ப்பில்லை. தமிழ்நாடு அரசியலில் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் உதாசீனப்படுத்திய தேமுதிக, இப்போது ஒரு தேர்தலில் கூட்டணி பேரம் கூட நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இருந்து தேமுதிகவை பிரேமலதா மீட்பாரா என்ற கேள்வி எந்த தேமுதிக தொண்டருக்கும் இல்லை. ஏனெனில் அந்த நிலைக்கு தள்ளியதே அவர்தானே?