ஸ்கெட்ச் போட்ட பிரீத்தி ஜிந்தா; பஞ்சாப் கேப்டனாகும் ரோஹித்? இத கேட்டிங்களா!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாவது தொடர்பாக பிரீத்தி ஜிந்தா விளக்கமளித்துள்ளார்.
ரோஹித் ஷர்மா
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட்டார். இந்த வருடம் அவர் சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.
தற்போது மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். ஆனால், ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, பாண்ட்யாவை கேப்டனாக நியமித்ததில் ரசிகர்களுக்கு உடன்பாடில்லை. இதனால் பாண்ட்யா எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் அதிருப்தி ஒளியை எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா வேறு அணிக்கு மாறக்கூடும் என்று செய்திகள் வெளியாகின. மேலும், அடுத்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரோஹித் ஷர்மாவை கேப்டனாக்க பிரீத்தி ஜிந்தா முயற்சி செய்கிறார் என்று செய்திகள், வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன.
பிரீத்தி ஜிந்தா
இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள பிரீத்தி ஜிந்தா "போலிச் செய்தி! இது தொடர்பாக வெளியாகும் அனைத்துச் செய்திகளுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. ரோஹித் ஷர்மா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
நான் அவரது தீவிர ரசிகை. நான் எந்த ஒரு நேர்காணலிலோ அல்லது இடத்திலோ இது பற்றி பேசியதில்லை. ஷிகர் தவான் மீதும் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அவர் காயம் அடைந்திருக்கும்போது இப்படிப்பட்ட வதந்திகளை உருவாக்குவது நல்லது அல்ல.
இணையத்தில் எப்படி செய்திகள் திரிக்கப்பட்டு போலியாக வெளியாகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம். இத்தகைய போலி செய்திகளை வெளியிட வேண்டாம் என்று அனைத்து ஊடகங்களிடமும் நான் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் அணி சிறந்த அணிதான். வெல்வதுதான் எங்கள் குறிக்கோள். நன்றி" என்று தெரிவித்துள்ளார்.