அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.5,000 வழங்கப்படும் - இபிஎஸ் அதிரடி
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.5,000 வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சி
திருத்தணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி எழுச்சிப் பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

“ தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். 2026ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அம்மா வழங்கிய விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும். மழையால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் துன்பத்தில் இருக்கும் போது,
அவர்களை நேரில் சென்று பார்க்காமல், திரைப்படம் பார்த்து மகிழ்ந்தவர்தான் ஸ்டாலின். அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற்று வரலாற்று சாதனை படைக்கும்.
5 ஆயிரம் ரூபாய்
திமுக ஆட்சியில் மின்சார கட்டணம், வீட்டு வரி அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் ஆகியவை மீண்டும் தொடங்கப்படும்.
செவ்வாய்தோறும் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கட்டணமில்லா தரிசனத்துக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்.
அதிமுக ஆட்சியில் உள்ளூர் மக்களுக்கு அளிக்கப்பட்ட கட்டணமில்லா தரிசனத்தை திமுக அரசு நிறுத்தியது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் 5 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.