அரிவாளைக் காட்டி மிரட்டிய சீமான்;'கள்' இறக்கும் போராட்டத்தை போலீஸ் ஏன் தடுக்கல? கிருஷ்ணசாமி
'கள்' இறக்கும் போராட்டத்தைத் தடுக்க போலீஸ் தவறியது ஏன்? என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான் போராட்டம்
தூத்துக்குடி, பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். அதன்படி, பெரியதாழைக்கு வந்த சீமான், பனை மரம் ஏறினார்.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "20 அடி உயரமுள்ள குட்டையான பனை மரத்தைத் தேர்வு செய்து முன்கூட்டியே மிகவும் பாதுகாப்பாக பலமான கயிறுகளால் உருவாக்கப்பட்டிருந்த ஏணிப் படிக்கட்டுகளில் விறுவிறுவென ஏறி,
ஏற்கனவே தயாராக வைக்கப்பட்ட 'கள்ளை' இறக்கி, அங்கேயே 'கள்ளைக்' குடித்து இன்றைய போராட்ட ஷூட்டிங்கை சீமான் வெற்றிகரமாக முடித்திருக்கிறார். பனையேறி 'கள்' இறக்கும் சாதனை வீடியோக்கள் உலகம் முழுவதும் போய்ச் சேர வேண்டியவர்களிடம் விரைந்து சென்று விட்டது.
கிருஷ்ணசாமி எச்சரிக்கை
ஒரு வாரக் கணக்கு இன்று நேர் செய்யப்பட்டிருக்கும்.! கள் இறக்குதல், சாராயம் காய்ச்சுதல் சட்டவிரோதம் எனத் தெரிந்த காவல்துறை சட்ட விரோதமாக 'கள்' இறக்கும் போராட்டத்தை தடை செய்ய பெரியதாழை பகுதிக்கு காவல்துறை முன்கூட்டியே செல்லாதது ஏன்? அதற்கு தடை விதிக்க மறுத்தது ஏன்?
காவல்துறை லாவகமாக தவிர்த்தது ஏன்? என்பதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.! கொழுந்துவிட்டு எரியும் அடுப்பிலிருந்து விறகைப் பிடுங்கிக் கொள்வதைப் போல திடீரென்று 'கள் ஓர் உணவு - கள் இறக்குவது உரிமை' என்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்து மது விலக்குப் போராட்டத்தை சீமான் நீர்த்துப் போகச் செய்ய முயல்கிறார்.
'கள்' மற்றும் சாராயம் போன்ற போதைப் பொருட்களில் கலப்படம் உள்ளிட்ட பல தவறுகள் நடப்பதால் பல உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால் தான் தடை செய்யப்பட்டது. சட்ட விதிமுறைகளை மீறி 'கள் ஓர் உணவு' என தவறான பிரச்சாரம் செய்யும் சீமான் மற்றும் சட்டவிரோதமாக ஜூன் மாதம் 15 ஆம் தேதி பெரியதாழையில் 'கள்' இறக்கியதுடன்,
அரிவாளை எடுத்துத் தூக்கிக் காட்டி காவல்துறைக்குக் கொலை எச்சரிக்கை செய்த சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 24 மணி நேரத்திற்குள் உரிய வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்படவில்லையெனில், தமிழ்நாடு எங்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக கடும் போராட்டம் வெடிக்கும்." என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.