கள் இறக்கும் போராட்டத்தை தொடர்ந்து ஆடு மாடு மேய்க்கும் போராட்டம் - சீமான் அறிவிப்பு
ஜூலை 10ம் தேதி ஆடு, மாடுகள் மாநாடு நடத்தப்போவதாக சீமான் அறிவித்துள்ளார்.
கள் இறக்கிய சீமான்
தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என நீண்ட காலமாக நாம் தமிழர் கட்சி குரல் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.
அதன்படி, பெரியதாழை கிராமத்தில் நடைபெற்ற கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பனை மரம் ஏறி கள் இறக்கி தனது தொண்டர்களுக்கு வழங்கினார்.
சீமான் மரம் ஏறுவதற்கு வசதியாக பனை மரத்தில் ஏணி போல கட்டைகளை வைத்து கயிறு மூலம் கட்டப்பட்டிருந்தது. இதன்மூலம் கள் இறக்க தேவையான சாதனங்களுடன் பனை மரத்தில் சீமான் ஏறி கள் இறக்கினார்.
ஆடு, மாடுகள் மாநாடு
இந்த போராட்டத்தில் ஏராளமான பனை ஏறும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். இதனையடுத்து, மேடையில் பேசிய சீமான், "கள் விஷம் என்கிறார்கள். கள் விஷம் என்றால் டாஸ்மாக்கில் விற்கப்படும் மது என்ன மிளகு ரசமா அல்லது கோவில் தீர்த்தமா?
இந்தியாவின் பிற மாநிலங்களில் எல்லாம் கள் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் கள் இறக்க தடை ஏன்? இங்கு ஆட்சியாளர்களே மதுவை தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அந்நிய நாட்டு மது தடை செய்யப்படும். வெளிநாட்டு பயணிகளுக்காக சொகுசு விடுதிகளில் மட்டுமே மது விற்பனை செய்யப்படும். அரசு சார்பில், கள் என்ற பெயரை நீக்கிவிட்டு பனம்பால் விற்கப்படும்.
மேலும், வனத்தில் மேய்ச்சலுக்கு தடை விதிப்பதை எதிர்த்து ஜூலை 10ம் தேதி ஆடு, மாடுகள் மாநாடு நடத்தப்போகிறேன். அதில் தீர்வு கிடைக்காத நிலையில் 3000 ஆடு, மாடுகளை திரட்டிக் கொண்டு நானே வனத்திற்குள் மேய்க்கச் செல்வேன்" என தெரிவித்துள்ளார்.