சிக்கிய ரூ.4 கோடி.. சிக்கலில் நயினார் நாகேந்திரன்? வெளியான பரபரப்பு வாக்குமூலம்!
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் நாளை சம்மன் அனுப்ப தாம்பரம் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
சிக்கிய பணம்
சென்னை தாம்பரம் ரயில்நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சமீபத்தில் பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை எடுத்துவந்த சதீஷ், பெருமாள், நவீன் ஆகியோரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தேர்தல் பணப்பட்டுவாடாவிற்காக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் என்பவர் எடுத்து வர சொன்னதாக தெரிவித்தனர். மேலும், இந்த பணம் நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் மற்றும் அவரது நண்பர்கள் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோர் கொடுத்து அனுப்பிய பணம்” என்றும் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இந்த 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதனிடையே நேற்று முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோர் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜரானார்கள்.
மீண்டும் சம்மன்
இதில் நயினார் நாகேந்திரன் உறவினர் முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் “எனக்கும் இந்த பணத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் பணம் எடுத்து வரும் நபர்களுக்கு பாதுகாப்பிற்காக தாம்ரம் ரயில்நிலையத்திற்கு 2 ஆட்களை அனுப்பி வைக்குமாறு கேட்டார்.
இதனால்தான் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரை ரயில்நிலையத்திற்கு அனுப்பி வைத்தேன். முருகன் சென்னையில் 4 ஹோட்டல்களை லீசுக்கு எடுத்துள்ளார். இதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோர் பணிபுரிந்து வந்தார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முருகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் நாளை சம்மன் அனுப்ப தாம்பரம் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஏற்கெனவே, அவருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் 10 நாட்கள் கால அவகாசம் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..