சென்னையில் ரோடு ஷோ...வேலூரில் பொதுக்கூட்டம் - பிரதமரின் சூறாவளி - சுற்றுப்பயணம் முழு விவரம்
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார்.
தேர்தல்
பாஜகவின் தேசிய தலைவர்களின் குறி தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் ஆழமாக கால்பதிக்க முயன்று வரும் பாஜக, இந்த தேர்தலை முதல் படியாகவே நகர்த்தி வருகின்றது.
நாட்டின் முதல் தேர்தலாக வரும் 19-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதற்காக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்தான நிலையில், வரும் 9-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார்.
பிரதமர் சுற்றுப்பயணம்
நாளை உத்தரபிரதேசத்தின் பிலிபட் பொது கூட்டத்தை முடிக்கும் பிரதமர் மோடி அங்கிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறார். அப்பொதுக்கூட்டத்தை முடித்து அங்கிருந்து சென்னைக்கு மாலை 6:30 மணிக்கு வருகிறார்.
பாண்டி பஜாரில் நடைபெறும் ரோட் ஷோவில் பங்கேற்று சென்னை பாஜக வேட்பாளர்கள் தமிழிசை சௌந்தர்ராஜன், வினோஜ் செல்வம், பால் கனகராஜ் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கிறார். புதன்கிழமை வேலூருக்கு சென்று அங்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் நீலகிரி வேட்பாளர் எல். முருகனுக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
தமிழகத்தில் 2 நாள் பிரச்சாரத்தை முடிக்கும் பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாளை மறுதினம் புறப்பட்டு செல்கிறார்.