பட்ஜெட் கூட்டத்தொடர்: விவாதங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்
பிரதமர் மோடி எதிர்க் கட்சிகளுக்கு சில வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (31-01-24) தொடங்கியது. முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் ஆரம்பித்தார்.
தொடர்ந்து, நாளை (01-02-24) மத்திய அரசின் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மோடி வேண்டுகோள்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம், இடையூறு செய்வதாக இருக்கக் கூடாது. ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தக் கூடாது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாளை இடைக்கால பட்ஜெட்டில் பல துறைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்.
கடைசி கூட்டத் தொடர் என்பதால் இதனை யாரும் புறக்கணிக்க வேண்டாம். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கு பிறகு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம். இது தேர்தல் கால பட்ஜெட் என்பதால், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.