Impact Player ரோஹித்; நல்லது செய்த பாண்ட்யா - இது தெரியாமல் திட்டித்தீர்த்த ரசிகர்கள்!
ரோஹித் ஷர்மா இம்பாக்ட் பிளேயராக விளையாடியது குறித்து மும்பை அணி வீரர் பியூஷ் சாவ்லா விளக்கம் அளித்துள்ளார்.
மும்பை - கொல்கத்தா
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் மும்பை அணி 170 என்ற இலக்கை எட்ட முடியாமல் 145 ரன்னில் ஆல்-அவுட்டாகி தோல்வியடைந்தது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி வெறும் 3 வெற்றிகளை மட்டுமே மும்பை அணி பெற்றுள்ளது.
இதனால் அந்த அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. மேலும், இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா இம்பாக்ட் பிளேயராக விளையாட வைக்கப்பட்டார். இதனால் மும்பை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பியூஷ் சாவ்லா விளக்கம்
மும்பை அணிக்கு 5 முறை கோப்பையை பெற்றுத்தந்த ரோஹித்தை இம்பாக்ட் பிளேயராக ஆட வைப்பதா? என கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை தீட்டித் தீர்த்தனர். மேலும், அவர் வந்தது முதலே ரோஹித்தை அசிங்கப்படுத்தி வருவதாக விமர்சித்தனர்.
இந்நிலையில் இது குறித்து மும்பை அணியின் சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது "ரோஹித் ஷர்மாவுக்கு முதுகு பிடிப்பு இருந்தது. கொல்கத்தா போட்டிக்கு முன்பாக அவர் அசௌகரியமாக இருந்தார்.
அதனால் அவர் பீல்டிங் செய்ய வேண்டாம் என கேப்டன் ஹர்திக் பாண்டியா முடிவெடுத்தார். அதனடிப்படையிலேயே ரோஹித் இம்பாக்ட் பிளேயராக ஆட வைக்கப்பட்டார்" என்று தெரிவித்துள்ளார். ஆனாலும், பியூஷ் சாவ்லாவின் விளக்கத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை.