அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 4 பேர் கைது!
அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பேத்கர் சிலை
கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதன் பின்னல் ஒரு பழைய ஊராட்சி மன்ற கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்துள்ளனர்.
ஆனால் அந்த குண்டு குறி தவறி சிலைக்கு பின்புறத்தில் உள்ள கட்டிடத்தின் மீது விழுந்து வெடித்துள்ளது. அதிர்ஷ்ட வசமாக அந்நேரத்தில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு
அப்போது, இந்த குண்டு வீசு சம்பவத்தில் வெற்றி (21), கிருஷ்ணகுமார் (21), சதீஷ் (29), விஜயராஜ் (22) ஆகியோர் ஈடுபட்டதை அறிந்த போலீசார், இந்த 4 பேரை கைது செய்தனர்.இது பற்றி அறிந்த கடலூர் மாநகராட்சி துணை மேயரும், விசிக பிரமுகருமான தாமரைச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் திரண்டு அம்பேத்கர் சிலையை பார்வையிட்டார்.
தொடர்ந்து சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்திலும் அவர் ஈடுபட்டார். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அங்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.