பெரியார் சிலை விவகாரம் - காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை!
ஸ்ரீரங்கம், பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெரியார் சிலை
வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரன் புகார் ஒன்றை அளித்தார். அதில், “கடந்த 1ஆம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்கண்ணன் பங்கேற்றார்.

அப்போது கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார்.
கனல் கண்ணன் பேச்சு
ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால் கலவரம் உண்டானது. அந்த சம்பவம் முடிந்து சுமார் 15 ஆண்டுகள் ஆன நிலையில் தற்பொழுது மீண்டும் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கனல் கண்ணன் பேசியது கண்டிக்கத்தக்கது.

அதே போல் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கலவரத்தை தூண்டும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். இரு மதத்தினரிடையே மோதலை உண்டாக்கும் வகையில் கனல்கண்ணன் பேசியுள்ளதால், அவர் மீதும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர், கனல் கண்ணன் மீது, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 153- கலகம் செய்ய தூண்டிவிடுதல், 505(1)(b)- அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரியார் சிலை விவகாரம் திடர்பாக சமூக வலைதளங்களில் கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.