திமுகவை அகற்ற சாதி, மத கலவரத்தை ஏற்படுத்த சதி - முதலமைச்சர் காட்டம்
திமுக ஆட்சியை அகற்ற சதி செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கலவரம்
கன்னியாகுமரி திமுக அலுவலகத்தில் 6.5 அடி உயர பீடத்தில் 8 அடி உயரத்தில் உள்ள கருணாநிதி வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “மக்கள் மத்தியில் அனைவரும் போற்றும் வகையில் நமது செயல்பாடு அமைந்துள்ளது.
சிலை திறந்து வைத்து நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது, அண்ணா, கலைஞர், ஆகியோர் எந்த லட்சியத்திற்காக இந்த கட்சியை துவக்கினார்களோ அந்த லட்சியத்திற்காக பாடுபட வேண்டும் என்பதுதான். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நமது பணியை பார்த்து பாராட்டி கொண்டு இருக்கிறார்கள்.
முதலமைச்சர் குற்றச்சாட்டு
நாம் ஆட்சிக்கு முன்பிருந்தே வெற்றியை துவங்கி ஆட்சிக்கு வந்த பின்பும், வெற்றியுடன் தொடர்ந்து வருகிறோம். திராவிட மாடல் என்று மக்களை கவரும் வகையில் நல்லாட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார்களே, இந்த தொடர்ந்து விட்டால் என்னாவது என்று இந்த ஆட்சியை அப்புறப்படுத்த பல்வேறு திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
மதக் கலவரத்தை ஏற்படுத்தலாமா, சாதிக் கலவரத்தை ஏற்படுத்தலாமா அல்லது மக்களை பிளவுபடுத்தலாமா என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். மத்திய பாஜக ஆட்சியை அகற்ற மதச்சார்பற்ற சக்திகள் கவுரவம் பார்க்காமல் ஒன்றிணைய வேண்டும்”