UPIக்கும் இனி சேவைக் கட்டணம்? RBI கவர்னர் தகவல்!
யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்காது என RBI கவர்னர் தெரிவித்துள்ளார்.
யுபிஐ
மும்பையில், பணவியல் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கலந்துக்கொண்டார்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு யுபிஐ பயன்பாடு தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் ஒருபோதும் கூறியது கிடையாது. இதற்கான கட்டணங்களை யாரேனும் ஒருவர் செலுத்தித்தான் ஆக வேண்டும்.
இந்த யுபிஐ பரிவர்த்தனை மாடல் அப்படியே நீடித்த நிலைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான செலவை யாரேனும் ஒருவர் ஏற்றுத்தானே ஆகவேண்டும்.
கவர்னர் தகவல்
ஆனால், அதை தனி நபர்கள் செலுத்துகிறார்களா அல்லது ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்த்து செலுத்துகிறார்களா என்பதைத் தாண்டி யாரேனும் ஒருவர் செலவை ஏற்க வேண்டும் என்பதுதான் முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் பேசுபொருளாகி இருப்பதுடன், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் யுபிஐ மூலம் நடத்தப்படும் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கநாள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி மட்டும் இந்தியாவில் ஒரே நாளில் 70.7 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்ததாக நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.