நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது- ஜனாதிபதி உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

president india member
By Jon Jan 29, 2021 03:30 PM GMT
Report

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, குடியரசுத் தலைவரின் உரையுடன் இன்று தொடங்க உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருக்கின்றன.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் முதற்கட்டமாக இன்று தொடங்கி பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக காலையில் மாநிலங்களவையும், மாலையில் மக்களவையும் கூட இருக்கிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது.

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் நடைபெறும் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது- ஜனாதிபதி உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு | Parliament Budget Today Start

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றும்போது காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட 16 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்க மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்திருக்கிறார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி மற்றும் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிய சிரோன்மணி அகாலிதளம் கட்சிகளும் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிப்போவதாக கூறியிருக்கிறது.