2 வயது குழந்தையை கொன்ற பெற்றோர்! தூக்கிட்டு தற்கொலை- மனதை பதைபதைக்கும் சம்பவம்
மதுரையில் கடன் தொல்லையால் இரண்டு வயது குழந்தையை கொலை செய்துவிட்டு தாய் மற்றும் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. மதுரை பந்தடி 5வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், இவர் நகை பட்டறையில் ஆசாரி ஆக பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வாணி என்ற பெண்ணை உறவினர்கள் திருமணம் செய்து வைத்தனர்.
இவர்களுக்கு இரண்டு வயதில் ஹாசினி என்ற குழந்தை உள்ளது, இந்நிலையில் விஜயகுமாருக்கு கொரோனா காலம் என்பதால் வேலை சரிவர கிடைக்காத காரணத்தால் பல இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் தினமும் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததாக தெரிகிறது, இதனால் மனமுடைந்த விஜயகுமார் தன்னுடைய இரண்டு வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தன்னுடைய மனைவி வாணியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதிகாலை வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குழந்தை உட்பட 3 பேரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தெற்குவாசல் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையிலான காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.