பெண்ணின் மூளையில் மலைப்பாம்பு புழு - உயிரோடு நெளிந்து கொண்டிருந்ததால் அதிர்ச்சி!
பெண்ணின் மூளையில் உயிருடன் புழு கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிருடன் புழு
ஆஸ்திரேலியா, சிட்னியைச் சேர்ந்தவர் 64 வயது பெண். இவர் நிமோனியா, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல், இரவில் வியர்வை, மனச்சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாடு உள்ளிட்ட பல அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதற்காக 2 ஆண்டுகளாக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். தொடர்ந்து, 2022ல் இவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஐ.ஆர் ஸ்கேனில், மூளையில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி சம்பவம்
அதன் அடிப்படையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அதில், சிவப்பு நிறத்தில் 8 சென்டி மீட்டர் நீளமுள்ள புழுவை கண்டறிந்துள்ளனர். இந்தப் புழு அறிவியல்ரீதியாக `ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி' என அழைக்கப்படுகிறது.
இந்த வகை புழுவானது ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பப்புவா நியூ கினியா போன்ற பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட மலைப்பாம்புகளுடன் தொடர்புடையது. அந்தப் பெண் பாம்புகள் நிறைந்த ஏரிக்கு அருகில் வசித்து வந்துள்ளார்.
சமைப்பதற்காகச் சேகரிக்கப்பட்ட நியூசிலாந்து நாட்டு கீரை போன்ற உண்ணக்கூடிய புற்கள் மூலம் புழுவின் முட்டைகள் கவனக்குறைவாக உட்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
மருத்துவ வரலாற்றில் மனித மூளையில் புழு கண்டுப்பிடிக்கப்படுவது இதுவே முதல் முறை. இதுபோன்ற தொற்றுக்கள் எதிர்காலத்திலும் நிகழலாம். என மருத்துவர்கள் கூறுகின்றனர்.