பானி பூரி, லஸ்ஸி என பிரதமர் மோடியுடன் ஒரு ரவுண்டு கட்டிய ஜப்பான் பிரதமர்!
இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் மோடியுடன் பானி பூரியை ரசித்து சாப்பிட்டார்.
இந்தியா வருகை
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின், ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்தார். அதையடுத்து இருவருக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.
மோடியுடன் பானிபூரி
அப்போது, மரப்பெட்டியில் சந்தன மர புத்தர் சிலையை வைத்து மோடி அவருக்கு பரிசளித்தார். தொடர்ந்து, புத்த ஜெயந்தி பூங்காவை பார்வையிட்டு பானி பூரி கடையில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து பானி பூரியை ரசித்து சாப்பிட்டார்.
மிகவும் ருசியாக இருப்பதாகவும் கூறி கேட்டு வாங்கி சாப்பிட்டார். மேலும், மாம்பழ பன்னா மற்றும் லஸ்ஸியையும் பருகினார். ஜி20 தலைமை பொறுப்பை இந்தியாவும், ஜி7 தலைமை பொறுப்பை ஜப்பானும் ஏற்றுள்ள நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.