48 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானியர்கள் வெளியேறனும் - இந்தியா முடிவு இதுதான்..
இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேபாளத்தைச் சேர்ந்தவர் உட்பட 28 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்பின் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி,
இந்தியா முடிவு
பாகிஸ்தானுடன் 1960 ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி - வாகா சோதனைச் சாவடி உடனடியாக மூடப்படும். உரிய ஒப்புதலுடன் வந்தவர்கள், வரும் மே 1 ஆம் தேதிக்குள் அந்த வழியாக பாகிஸ்தான் திரும்ப வேண்டும்.
இந்தியாவுக்குள் பாகிஸ்தானியர்கள் வர ’சார்க்’ விசா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த விசா சேவை நிறுத்தப்படுகிறது. இந்த விசா பெற்று இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும். டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு, ராணுவம், கடற்படை, விமானப்படை சார்ந்த ஆலோசகர்கள் ஒரு வாரத்துக்குள் வெளியேற வேண்டும்.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் தூதரக அதிகாரிகள் அல்லாதவர்கள் உடனடியாக இந்தியவுக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.