பஹல்கம் தாக்குதல் ; மத வெறுப்பாக திசை திருப்ப வேண்டாம் - ஆண்ட்ரியா வேண்டுகோள்
பஹல்கம் தாக்குதல் தொடர்பாக பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பஹல்கம் தாக்குதல்
பஹல்கம் தீவிரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. TRF என்னும் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், இதுவரை (23-04-2025) 28 பேர் உயிரிழந்தனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. காஷ்மீரில் இருந்த தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக டெல்லி அழைத்து வந்த தமிழ்நாடு அரசு, இன்றிரவு அவர்கள் அனைவரையும் தமிழ்நாட்டுக்கு அழைத்துவரவுள்ளது.
பல பிரபலங்கள் தங்கள் வருத்தங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் நடிகையும் பாடகியான ஆண்ட்ரியா பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆண்ட்ரியா
பஹல்கம் சென்றிருந்த போது எடுத்திருந்த ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா, இவ்வாறு எழுதியிருந்தார்: "முன்னொருமுறை நானும் பஹல்கம் சுற்றுலாப் பயணிதான். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களை எண்ணி மனம் வருந்துகிறேன். அதே சமயம் இந்த தாக்குதலால் தீவிர கண்காணிப்புக்கும், சோதனைக்கும் உள்ளாக்கப்படும் காஷ்மீர் மக்களை எண்ணி மனம் உடைகிறேன்.
பிரிவினைவாதம் பெருகிவரும் நமது நாட்டில், இந்த சம்பவத்தைக் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது திருப்பி விடாமல் இருப்பது, குடிமக்களாக நமக்கிருக்கும் கடமை. நான் அடிக்கடி என் மனதில் பட்டதைச் சொல்வதில்லை, ஆனால் இதைச் சொல்ல வேண்டும் என்று உணர்ந்தேன். வெறுப்புக்கு இங்கு இடமில்லை.என் comment section-னிலும் இல்லை, நம் உலகத்திலும் இல்லை."
தீவிரவாதம் என்றவுடன் ஒரு குறிப்பிட்ட மதத்தினரைக் குறிவைக்கும் பழக்கம் பொதுசமூகத்தில் பரவலாக இருக்கும் ஒரு கண்ணோட்டம். இக்கட்டான இம்மாதிரியான சூழலில், மத நல்லிக்கணத்தையும், சகோதரத்துவத்தையும் மறந்து, மத ரீதியிலான கண்ணோட்டத்தில் பொதுசமூகம் இயங்கும்போது, ஒரு பொறுப்பான கலைஞராக எடுத்துரைத்து அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக ஆண்ட்ரியா திகழ்வதாக, பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.