15 நகரங்களை குறிவைத்து தாக்க முயன்ற பாகிஸ்தான்; முறியடித்த இந்தியா - எப்படி?
15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதலை இந்தியா முறியடித்துள்ளது.
தாக்க முயன்ற பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர்` என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது.
இதில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள 244 முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டு வருகிறது.
முறியடித்த இந்தியா
இந்நிலையில், இந்தியாவில் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டு உள்ளது என பாதுகாப்பு துறை அறிவித்து உள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பில், "மே 07-08 இரவு, வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள நகரங்களில் உள்ள ராணுவ மையங்களைக் குறிவைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முற்பட்டது.
இருப்பினும், நமது வான் பாதுகாப்பு அமைப்பு ( Counter UAS Grid and Air Defence systems) மூலம் அவை அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல் முயற்சியை முறியடிக்கும் வகையிலேயே டிரோன் மற்றும் ஏவுகணையின் உடைந்த பாகங்கள் பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.