பாஜக நுழைஞ்சா அந்த மாநிலமே உருப்படாது - ப.சிதம்பரம் தாக்கு!
பாஜக நுழைந்த மாநிலம் உருப்படாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வாக்கு திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியில் புதிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய ப. சிதம்பரம், “வாக்கு திருட்டு நடக்கிறது,. தமிழ்நாட்டில் இதுவரைக்கும் வாக்குத்திருட்டு நடக்கவில்லை.
பீகாரில் வாக்குத்திருட்டு நடந்துள்ளது. கர்நாடகத்தில் சில தொகுதிகளில் மகாராஷ்டிராவில் பல தொகுதிகளில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது. தமிழ்நாட்டிலோ, கேரளத்திலோ வாக்குத்திருட்டு நடத்த முடியாது என்று நான் டெல்லியில் உத்தரவாதம் தந்திருக்கிறேன்.
காரணம் கேரளத்தில் இடதுசாரி அணி ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று வலிமையான கூட்டணிகள் இருக்கின்றன. அதேபோல் தமிழ்நாட்டிலும் வாக்குத் திருட்டு நடத்த முடியாது.
சிதம்பரம் விளாசல்
ஏனென்றால் இங்கு ஒரு கிராமத்தில் யாரேனும் வெளிநபர் ஒருவர் நுழைந்துவிட்டாலோ வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று விட்டாலோ இங்கு உள்ளவர்கள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் பீகாரில் அப்படி கிடையாது அதனால்தான் அங்கு வாக்குத் திருட்டு நடக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது, அதேபோல் எதிர் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அதிமுக கூட்டணியும் வலிமையாக இருக்கிறது.வாக்குத் திருட்டு விவகாரத்தில் நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலும் வாக்குத்திருட்டும் முயற்சி நடக்கும். ஏனென்றால் தமிழ்நாட்டில் பாஜக நுழைந்திருக்கிறது. பாஜகவோடு கூட்டணியில் உள்ள அதிமுக வாக்குத்திருட்டை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அவர்களோடு உள்ள பாஜகவிற்கு வேலையே வாக்குத்திட்டு தான்.
ஆமை புகுந்த வீடும், அமீனா நுழைந்த வீடும் உருப்படாது என்ற ஒரு பழமொழி இருக்கிறது. அதேபோல் பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது. அதனால் இன்னும் ஏழு எட்டு மாதத்தில் தேர்தல் வரவுள்ளது. வாக்காளர் பட்டியல் வரும்பொழுது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நமக்கு அதிமுக அணியும் போட்டி அணிதான். அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. நாமும் அதிமுக அணியினரும் ஒரு கருத்தில் உடன்பட்டு இருக்கின்றோம். பாஜகவை அவர்களிடமிருந்து கழித்து பார்த்தால் இருவருக்குமே வாக்கு திருட்டு நடக்கக்கூடாது என்பதுதான்.
வாக்காளர் பட்டியல் வரும்பொழுது யார் பெயரை நுழைக்கிறார்கள், யார் பெயரை நீக்கிறார்கள் என்பதை விழிப்புடன் நாம் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் வாக்குத்திருட்டு நடக்காது என்று முழு நம்பிக்கை இருக்கிறது.
ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது அந்த நம்பிக்கைக்கு ஆதரவாக ஆதாரமாக நம்முடைய உழைப்பும் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.