திமுகவின் பி டீம் தான் ஓபிஎஸ், டிடிவி - அட்டாக் செய்த எடப்பாடி பழனிசாமி!
தி.மு.க.வின் பி டீம் தான் ஓ.பி.எஸ், டி.டி.வி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் பி டீம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் இன்று செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம்.

காலதாமதம் காரணமாக சசிகலாவால் எங்களுடன் இணைந்து இன்று வர முடியவில்லை. சசிகலா எங்கு இருந்தாலும் மனதால் என்றும் எங்களுடன் இணைந்து உள்ளார். அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும்.
ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையனுடன் கைகோர்த்து தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. எங்களுக்கு எதிரி இல்லை. இ.பி.எஸ். மட்டும் தான் எங்களது எதிரி. இ.பி.எஸ்.-ஐ வீழ்த்தும் வரை ஓய மாட்டோம். தொடர்ந்து ஒருங்கிணைந்து பயணிப்போம் என டிடிவி தெரிவித்திருந்தார்.
இபிஎஸ் சாடல்
இந்நிலையில் மதுரை, கப்பலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், துரோகிகளாகல் தான் கடந்த தேர்தலில் அதிமுகவால் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது. கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி ஒன்றாகி இணைய முடியும்.எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் துரோகிகள் இருந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இருவரும் திமுகவின் பி டீம்.
பயிர் வளர வேண்டும் என்றால் களை எடுக்க வேண்டும். கட்சியில் உள்ள களைகள் நீக்கப்பட்டுவிட்டது. இப்போது அதிமுக எனும் பயிர் செழித்து வளர்ந்து வந்து ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளார்.