அதிமுக இணைவை தடுக்கவே திமுக இதை செய்துள்ளது - ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட சென்னை மாநகராட்சி பணிகளில் ரூ.26.61 கோடி டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதனையடுத்து அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ. 27 கோடி லஞ்சம் வாங்கியதாக, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
ஓபிஎஸ் கண்டனம்
இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றால் தமிழ்நாட்டு மக்களின் கடும் அதிருப்தியை திமுக சந்தித்துக் கொண்டு வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற முயற்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஈடுபட்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் இரா.வைத்திலிங்கம் 2025-ல் அதிமுக ஒன்றிணையும் என்று சில நாட்களுக்கு முன் பேட்டியளித்திருந்தார்.
திமுகவிற்கு அச்சம்
இந்நிலையில், அதிமுக ஒன்றிணைந்து விடுமோ என்ற அச்சத்தில், எஸ்.பி.வேலுமணியின் மீது திமுக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு சீரழிந்து வருவதையும், திமுகவின் மேல் உள்ள கடும் அதிருப்தியையும் மூடி மறைக்க வைத்திலிங்கம் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. இரா. வைத்திலிங்கம் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம். pic.twitter.com/MW6eYZjpXN
— O Panneerselvam (@OfficeOfOPS) September 22, 2024
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அதிமுகவை ஒன்றிணையவிடாமல் தடுத்து, அதன்மூலம் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று முதலமைச்சர் கனவு காண்கிறார். அவருடைய கனவு நிச்சயம் பலிக்காது. என தெரிவித்துள்ளார்.