பாஜக கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ் - எடப்பாடி பழனிசாமி சொன்னதை பாருங்க..
பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைவாரா? என்ற கேள்விக்கு இபிஎஸ் பதிலளித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜக கூட்டணியுடன் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைந்து செயல்படுவார் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே.. என கேட்டதற்கு,
பாஜக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்குகிறது. எனவே நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த சூழ்நிலை வரும்போது அதற்கான பதிலை நாங்கள் தருவோம் என பதிலளித்துள்ளார்.
நீங்களும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் ஒரே மேடையில் பேச உள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே என்றதற்கு, நீங்கள் இதுகுறித்து நயினார் நாகேந்திரனிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.
இபிஎஸ் விளக்கம்
மேலும் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி.மைத்ரேயன் ஆகியோர் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, இது சுதந்திர நாடு, ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
இந்த கட்சியை சேர்ந்தவர்கள் அந்த கட்சிக்கு போகக்கூடாது என யாரும் தடுக்க முடியாது. எல்லோரும் கட்சி மாறி மாறித் தான் இருக்கிறார்கள்.
கட்சியின் விதிகளை மீறுபவர்களை கட்சியில் இருந்து அகற்றுவதும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இணைப்பதும், தமிழக அரசியல் வரலாற்றில் புதிதல்ல” எனத் தெரிவித்துள்ளார்.