நபிகள் நாயகம் சர்ச்சை விவகாரம் - 4 நாட்களாக காணாமல் போன நுபுர் சர்மா - மும்பை போலீசார் தேடுதல்
சர்ச்சை பேச்சு
கடந்த 27-ம் தேதி முன்பு ஞானவாபி மதவழிபாடு தலம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபி குறித்து இழிவான வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. நுபுர் சர்மா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து பாஜக உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த நவீன் ஜிண்டாலையும் அக்கட்சி நீக்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நுபுர் ஷர்மாவை கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. ராஞ்சியில் நடந்த வன்முறையில் பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.
முஸ்லிம்கள் கைது
இஸ்லாமியர்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் மீது அவதூறு விமர்சனங்களை முன்வைத்த பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் தலையை வெட்ட வேண்டும் என்று உத்தரவிட்ட காஷ்மீர் முஸ்லிம் மத குரு கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பிரச்சினையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த 357 முஸ்லிம்களை உ.பி. போலீசார் கைது செய்தனர். மகராஷ்டிராவின் ஆசிரியரான முகம்மது குப்ரான் கான் என்பவர் மீது மும்பையின் தானே, பிதோய் ஆகிய காவல்நிலையங்களில் புகார் செய்யப்பட்டிருந்தது.
காணாமல் போன நுபுர் சர்மா
இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த மே 29ம் தேதியன்று மும்பை ராசா அகாடமியின் இணைச் செயலாளர் இர்ஃபான் ஷேக் கொடுத்த புகாரின பேரில் நுபுர் சர்மா மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அதேபோல், டெல்லியிலுள்ள நுபுர் சர்மா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், விசாரணைக்காக மும்பை போலீஸார் நுபுர் சர்மாவிற்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
வரும் ஜூன் 25ல் நேரில் ஆஜராகும்படியும் பைதோனி போலீஸ் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, மும்பை பைதோனி போலீசார் நுபுர் சர்மாவை நேரில் விசாரிக்க நேற்று டெல்லி வந்திருந்தனர்.
ஆனால், கடந்த 4 நாட்களாகவே நூபுர் சர்மாவைக் காணவில்லை என்று மும்பை பைதோனி போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நுபுர் சர்மா கூறியிருந்தார். இதனையடுத்து, அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில், அவரைக் காணவில்லை என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.