நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா சர்ச்சை பேச்சு : கத்தாரிலிருந்து வெளியேற்றப்படும் இந்து தொழிலாளர்கள்...?
சர்ச்சை பேச்சு
கடந்த 27-ம் தேதி முன்பு ஞானவாபி மதவழிபாடு தலம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபி குறித்து இழிவான வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. நுபுர் சர்மா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து பாஜக உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த நவீன் ஜிண்டாலையும் அக்கட்சி நீக்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நுபுர் ஷர்மாவை கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. ராஞ்சியில் நடந்த வன்முறையில் பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.
முஸ்லிம் மத குரு கபூர் கைது
இஸ்லாமியர்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் மீது அவதூறு விமர்சனங்களை முன்வைத்த பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் தலையை வெட்ட வேண்டும் என்று உத்தரவிட்ட காஷ்மீர் முஸ்லிம் மத குரு கபூர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்து தொழிலாளர்கள் வெளியேற்றம்?
இந்நிலையில் நுபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கத்தார் அரசு அந்நாட்டில் வேலை செய்யும் இந்து தொழிலாளர்களை வெளியேற்றி வருவதாக, அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ உண்மை கிடையாது என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ரெட்கோ இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் வெளியிட்ட சம்பள அறிக்கைக்கு எதிராக, அந்நிறுவனத்தில் வேலை செய்த பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அந்த வீடியோ தற்போது நுபர் சர்மா விவகாரத்துடன் இணைத்து போலியாக வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.