இப்படி சிந்தனை இருந்தா எப்படி நிம்மதி வரும்..? ரஜினியை சாடிய சீமான்!
சிந்தனை தவறாக இருந்தால் நிம்மதி எப்படி வரும் என நடிகர் ரஜினிகாந்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான்
சென்னை அம்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்ததைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரிகளை உயர்த்துவதில் தான் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்துவதாகவும் ஆனால் வருமானத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
நடிகர் ரஜினிகாந்த்
மின் கட்டண உயர்வு விவகாரத்தில் திமுகவும் பாஜகவும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி நாடகம் ஆடுவதாக விமர்சித்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் சாதியையும், அறிவையும் தொடர்புபடுத்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
அவரது பேச்சுக்கு சீமான் கண்டனம் தெரிவித்தார். பணம், புகழ், பெயர் இருந்தும் தனக்கு 10 சதவீதம்கூட நிம்மதி கிடைக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியதை சுட்டிக்காட்டிய சீமான், தவறான சிந்தனை இருந்தால் எப்படி நிம்மதி கிடைக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்.
கடலுக்குள் விக் வைப்பீர்களா?
இதனிடையே வங்க கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடும் கண்டனம் தெரிவித்தார். மெரினாவில் எந்தச் சின்னமும் நிறுவ முடியாது. அது நடக்கப் போவது இல்லை என்று திட்டவட்டமாக கூறினார்.
இப்போது பேனா வைப்பீர்கள், பிறகு கண்ணாடி வைப்பீர்களா? என்று கேள்வியெழுப்பினார். ஒருவேளை உதயநிதி முதலமைச்சர் ஆகிவிட்டால், என் அப்பா ஒரு ' விக் ' வைத்திருந்தார், என சொல்லி கடலுக்குள் விக் வைப்பீர்களா? என்றார்.
சர்ச்சை
கடந்த சில தினங்களுக்கு முன்பு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் ரஜினி,அறிவு என்பது புத்தி, சிந்தனை, நீ யார்? எங்கிருந்து வந்தாய்? சாதி என்று எல்லாவற்றையும் சேர்த்ததுதான். பணம், புகழ், பெயர், பெரும் பெரும் அரசியல்வாதிகளை சந்தித்தவன் நான்.
ஆனால், 10 சதவீதம் கூட எனக்கு நிம்மிதியோ சந்தோசமோ இல்லை. ஏனென்றால் சந்தோசமும் நிம்மதியும் நிரந்தமானவை அல்ல." என்று கூறினார். அறிவு என்பது சாதியையும் சேர்த்தது தான் என்று அவர் கூறிய கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.