சும்மா கடையில் டீ குடிச்சா..மைக் புடிச்சி பேசினால்..எதுவும் மாறாது - சசிகலா கடும் சாடல்!
சும்மா டீக்கடையில் டீ குடிப்பதால் எதுவும் மாற போறது இல்லை என மு.க.ஸ்டாலினை சசிகலா சாடியுள்ளார்.
சசிகலா
வடகிழக்கு பருவமழை துவங்கியதால் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை சசிகலா வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தற்போது நடைபெற்று வரக்கூடிய அரசு என்பது மக்களுக்கான அரசா என்ற கேள்வியை தான் எழுப்பியுள்ளது. அவர்களுடைய ஆட்சி முறை அப்படி இருக்கிறது.
இப்பொழுது இருக்கக்கூடிய அரசு அவர்களுடைய கட்சி சார்ந்த தலைவர்களின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக தான் செயல்பட்டு வருகிறது. தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் மக்களுக்கான நன்மைகளை செய்திருக்கிறோம் என்பதை கூறுகிறார்கள் தவிர,
கள நிலவரம் அப்படி அல்ல. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு முறை மழை பெய்து இருக்கிறது. அந்த மழைக் காலங்களில் சென்னை மழை வெள்ளத்தில் எப்படி தத்தளித்தது என்பதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். மக்களும் மறந்திருக்க மாட்டார்கள்.
சாடல்
இந்த நிலையில் அவர்கள் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது. மழைக்காலங்களில் செய்ய வேண்டிய பணிகளை திமுக அரசு செய்ய தவறியுள்ளது. சும்மா டீக்கடையில் போய் முதலமைச்சர் டீ குடிப்பதாலேயோ, மைக் புடிச்சிட்டு பேசுறதாலேயோ எதுவும் மாற போறது இல்லை.
இது தான் திமுகவின் உண்மை நிலை. பல்லாயிரம் கோடி ரூபாய் சென்னையினுடைய வளர்ச்சிக்காக செலவு செய்து உள்ளோம் என அரசு சொல்கிறது. ஆனால், அப்படி செலவு செய்திருந்தால்
ஒரு நாள் மழைக்கு எப்படி சென்னை இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கும். ஏழை மக்களுக்கோ அல்லது நடுத்தர மக்களுக்கு உதவி செய்யக்கூடிய அரசாக திமுக அரசு செயல்படவில்லை. என்று குற்றஞ்சாட்டினார்.