கடித்துக் குதறிய தெருநாய் - பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்!
7 மாத குழந்தையை தெருநாய் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 மாத குழந்தை
உத்தரப் பிரதேசம், நொய்டாவின் செக்டார் 100 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கு கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு பணியாற்றும் தம்பதி தங்கள் 7 மாத குழந்தையுடன் வேலைக்கு வந்துள்ளனர்.

அருகே குழந்தையை வைத்து விட்டு வேலை பார்த்துள்ளனர். அப்போது அந்த குடியிருப்பு பகுதிக்குள் வந்த தெருநாய், அந்த 7 மாத கைக்குழந்தையை கடித்து குதறியுள்ளது. அதில் பச்சிளம் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது.
பரிதாப பலி
தொடர்ந்து, குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு, பெற்றோர் ஓடி வந்து பார்த்ததில் குழந்தையை தெருநாய் கடித்து குதறுவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பின், குழந்தையை நாயிடமிருந்து மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தற்போது இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.