மோடியின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் - ஏற்றுக்கொண்ட சபாநாயகர்!
பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மணிப்பூர் விவகாரம்
பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி இழுத்து சென்று கூட்டுப்பாலியல் செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையவைத்தது. பெண்களுக்கு எதிரான இந்த சம்பவத்தை கண்டித்து பலர் குரல் கொடுத்தனர், கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆனால் இந்நாள்வரை அந்த கலவரம் ஓயவில்லை, இது குறித்து பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பின்னர் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலின் பேரில், மணிப்பூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் என மத்திய அரசு கூறியது. மேலும், இது குறித்து அறிக்கை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்து நேற்றுவரை மணிப்பூர் பற்றி விவாதம் நடத்தப்படாமலேயே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையின் காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய், மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு, மக்களவை பொதுச்செயலாளர் அலுவலகத்தில் நோட்டீஸ் அளித்திருக்கிறார்.
"இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் சரியாக இருக்கும் பட்சத்தில், மக்களவையில் சபாநாயகர் அதை வாசிப்பார். இதற்கு குறைந்த பட்சம் 50 எம்.பி-க்களாவது ஆதரவு தெரிவித்தால்தான், சபாநாயகர் அதை வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்வார். அவ்வாறு குறைந்தபட்சம் 50 எம்.பி-க்களின் ஆதரவு கிடைத்த பிறகு, வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி தன் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆட்சியிலிருக்கும் அரசு பதவி விலக நேரிடும்".
தற்பொழுது எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார். இதற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆதரவளித்து உள்ளனர். மேலும், இது குறித்த விவாதம் எப்பொழுது நடக்கும் என்பதை மக்களவை சபாநாயகரே முடிவு செய்வார்.