எந்தக் கோமாளி கூட்டத்தாலும் அதை செய்ய முடியாது - மு.க. ஸ்டாலின் உறுதி
எந்தக் கோமாளி கூட்டத்தாலும் நம்மை வெல்ல முடியாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு கூட்டம்
மதுரை, உத்தங்குடியில்திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. திமுக கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்துப் பொதுக்குழுவைத் தொடங்கி வைத்தார்.
திமுகவில், கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி எனப் புதிதாக இரண்டு அணிகள் உருவாக இருக்கிறது. இதன்மூலம் திமுகவில் உள்ள சார்பு அணிகளின் எண்ணிக்கை 23-லிருந்து 25 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து திமுக பொதுக்குழுவில் மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என்னைப் பொறுத்தவரைக்கும், பணிவுதான் தலைமைப் பண்பின் அடையாளம். சொல்லைவிடச் செயலே பெரிது. வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என்று சொல்வது, உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில்தான்.
ஸ்டாலின் உறுதி
நான் தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று, நம்முடைய கூட்டணி. அவர்களோடு நான் எப்படி நட்போடும், பாச உணர்வோடும் பழகுகிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும்.
எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே Out of control தான். டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது. எந்தக் கோமாளி கூட்டத்தாலும் நம்மை வெல்ல முடியவில்லை. வெல்லவும் முடியாது. திமுக ஆட்சிக்கு எதிர் அலையைவிட ஆதரவான அலையே அதிகம் வீசுகிறது.
சூரியன் நிரந்தரமானது. அதேபோன்று திமுகவும் நிரந்தரமானது. 7-வது முறையாக திமுக ஆட்சி அமைய வேண்டும். திமுக 7-வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்பதுதான் தலைப்புச் செய்தியாக வேண்டும். பொதுக்குழுவில் தொடங்கிய பயணம் தேர்தல் வெற்றிவிழாக் கூட்டத்தில் நிறைவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.