இந்திக்கு அடிமையாகிவிட்டதா திமுக? கூட்டணியில் பிளவு - பின்னணி என்ன?
இந்திக்கு அடிமையாகி விட்டதா திமுக? என நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்திக்கு அடிமையா?
டெல்லியில் 'இந்தியா' கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், கூட்டணியில் உள்ள 28 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அதில், நிதிஷ்குமார் இந்தியில் பேசும் போது, வழக்கம் போல ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என திமுக தரப்பில் கேட்கப்பட்டது.
நாராயணன் திருப்பதி காட்டம்
ஆனால் திடீரென நிதிஷ்குமார், இந்தி தேசிய மொழி; இந்தியை அனைவரும் கற்க வேண்டும் என கொந்தளித்தார். இது தொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், இந்தியை தூக்கிப்பிடித்தும், மற்ற மொழிகளை அவமானப்படுத்தியும் அந்த கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறது திமுக தமிழுக்காக,
தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக இருப்பதாக மார்தட்டி கொள்ளும் திமுக, கூட்டணி கூட்டத்தில் ஹிந்தி தேசிய மொழி என்றும் மற்ற மாநிலத்தவர்களை அவதூறு செய்தும் அமைதி காத்தது என்? தமிழை விட இந்தி உயர்ந்தது என்றெண்ணி இந்திக்கு அடிமையாகி விட்டதா திமுக? கூட்டணிக்காக தமிழ் மொழியை அடகு வைக்க துணிந்து விட்டதா திமுக?
உண்மையிலேயே தமிழுக்காக எதையும் செய்ய தயாராயிருக்குமானால், இந்நேரம் INDI கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கும் அல்லது நிதிஷ் குமார் கட்சியை INDI கூட்டணியை விட்டு வெளியேற்ற முனைந்திருக்கும். ஆனால், ஹிந்திக்கு குடை பிடித்து, சாமரம் வீசி, தமிழை புறந்தள்ளும் தி மு க விற்கு இனியும் தமிழ் குறித்து பேசும் தகுதி இல்லையென தெரிவித்துள்ளார்.