நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் இந்தியர்களுக்கு இலவச விசா - அமெரிக்கா நிறுவனம் அறிவிப்பு
நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் அனைத்து இந்தியர்களுக்கும் இலவச விசா வழங்குவதாக அமெரிக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒலிம்பிக்
2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது வரை இந்தியா 3 வெண்கல பதக்கங்கள் வென்று தரவரிசை பட்டியலில் 60 வது இடத்தில் உள்ளது.
இதில் எட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்க உள்ளார். 2021 ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றதால் இந்த தொடரில் பதக்கம் வெல்வார் என அவர் மீது பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
இலவச விசா
இந்நிலையில் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றால் இந்தியர்கள் அனைவருக்கும் எந்த நாட்டுக்கும் செல்வதற்கான விசாவை இலவசமாக வழங்க உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஆன்லைனில் விசா விண்ணப்பிக்கும் சேவையை வழங்கும் நிறுவனமான Atlys நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக Atlys நிறுவனத்தின் நிறுவனர் மோஹக் நஹ்தா தனது Linkedin பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதில், ஆகஸ்ட் 8 ம் தேதி நடக்கும் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் அனைவருக்கும் ஒரு நாள் இலவச விசா வழங்கப்படும். இதில் நீங்க பயணம் செய்ய விரும்பும் எந்த நாட்டை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். இலவச விசாவை பெற நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரியை கமெண்டில் பதிவிட்டால் உங்களுக்கு இலவச விசாவை பெறுவதற்கான கணக்கு துவக்கி தரப்படும் என தெரிவித்துள்ளார்.
இன்று (06.08.2024) நடை பெற உள்ள ஈட்டி எறிதல் தகுதி சுற்று போட்டியில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனாவுடன் போட்டியிடுகிறார். இதில் வெற்றி பெற்றால் ஆகஸ்ட் 8 ம் தேதி நடைபெறும் போட்டியில் பங்கு பெறுவார்.