கொடுமை தாங்க முடியல அப்பா - திருமணமான 78 நாளில் பெண் தற்கொலை
திருமணமாகி 78 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கொடுமை
திருப்பூர், அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகள் ரிதன்யா (27).
இவருக்கும் ஜெயம் கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அப்போது வரதட்சணையாக 300 பவுன் நகை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 500 பவுன் வாங்கி வா என கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ரிதன்யாவை கொடுமை செய்து வந்துள்ளனர். இதனை ரிதன்யா பல முறை தனது பிறந்த வீட்டில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெண் வீட்டார், கவின்குமாரை அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் மீண்டும் கவின்குமார் குடும்பத்தினர் அந்த பெண்ணை துன்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. உடனே குடும்பத்தினர் தேடிய நிலையில், மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இளம்பெண் தற்கொலை
அவரது கையில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகள் இருந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில் ஆடியோ மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.
அந்த ஆடியோவில் மாப்பிள்ளை வீட்டார் என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துகிறார்கள். 3 பேரும் சேர்ந்து என்னை கடுமையாக சித்ரவதை செய்கிறார்கள். எனவே இந்த கொடுமையான வாழ்க்கையை என்னால் வாழ முடியாது. அதே வேளையில் மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவும் எனக்கு உடன்பாடு இல்லை.
ஒருவனுக்கு ஒருத்திதான் என குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கணவர் கவின்குமார், மாமியார் சித்ரா தேவி, மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.