நடுரோட்டில் செவிலியரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கொடூரம் - கணவன் வெறிச்செயல்!
அரசு மருத்துவமனை செவிலியரை அவரது கணவனே நடுரோட்டில் எரித்து கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துவேறுபாடு
கோவில்பட்டி, சங்கரலிங்கபுரம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி அய்யம்மாள், இவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில், அய்யம்மாள் நெல்லையில் உள்ள அண்ணாநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
கொடூர சம்பவம்
இந்நிலையில், இரவு பணி முடிந்து வீடு திரும்பும்போது இவரது கணவன் வழிமறித்து, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், வாக்குவாதம் முற்றியதில் அவரது கணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். மேலும், அவர் மீது பெட்ரோல் ஊற்றி அங்கேயே தீ வைத்துள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
தகவலறிந்த வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய அவரது கணவன், காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.