எனக்கு அதில் சம்பந்தம் இல்லை.. டார்கெட் செய்கிறார்கள் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடிக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை ஈடுபட்டனர்.
இது தொடர்பாக போலீசார் முதல் முறை சம்மன் அனுப்பி அவர் ஆஜராகாத நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி ரூ.4 கோடி பணம் பறிமுதல் தொடர்பாக மே 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.
டார்கெட் செய்கிறார்கள்
இதை நான் பலமுறை கூறிவிட்டேன். எங்கேயோ பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை என்னுடன் தொடர்புபடுத்தி உள்ளனர். இதை அரசியல் சூழ்ச்சியாகவே நான் பார்க்கிறேன். முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்துள்ளனர்.”என்றார்.
மேலும், “தமிழகத்தில் ரூ.200 கோடிக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால் ரூ.4 கோடி பணம் பற்றி மட்டும் விசாரிக்கின்றனர். ரூ.4 கோடி பணம் பறிமுதல் வழக்கில் கைதான 3 பேரும் எனக்கு தெரிந்தவர்கள் தான். எனவே, காவல்துறை மிரட்டி அவர்களிடம் வாக்குமூலம் பெற்றிருக்கலாம்.
எனக்கு வழங்கப்பட்டுள்ள சம்மன் குறித்து வரும் மே 2ம் தேதி தாம்பரம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளேன். காவல்துறைக்கு எனது முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.