நக்கீரன் நிரூபர், கேமரா மேன் மீது கொடூர தாக்குதல் - பத்திரிக்கையாளர்கள் கண்டனம்
நக்கீரன் நிரூபர் மற்றும் கேமரா மேன் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரம்
கள்ளக்குறிச்சி, கனியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், கடந்த ஜூலை 13ல் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு பெரும் கலவரமே வெடித்தது.
தற்போது மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் செய்தி சேகரிக்க நக்கீரன் முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமரா மேன் அஜீத் சென்றுள்ளனர்.
நக்கீரன் - தாக்குதல்
பள்ளியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் பள்ளியின் வெளிப்புறத்தை படம்பிடித்துக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் அவர்கள் கார் கண்ணாடியை உடைத்து தாக்கியுள்ளது.
அங்கிருந்து தப்பி வந்தபோது பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல், தலைவாசல் சாலை அருகே நக்கீரன் செய்தியாளர் பிரகாஷ் மீது தாக்கி அவரது தலை உடைக்கப்பட்டுள்ளது. கேமரா மேன் அஜித்தின் பல் உடைக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர்கள் கண்டனம்
பிறகு, அப்பகுதி மக்கள் கூடியதைப் பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்த தப்பிய பிரகாஷ் மற்றும் அஜீத் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.