ரசிகர்கள் மட்டும் இல்லை அணியே பாண்டியாவை ஏற்றுக்கொள்ளவில்லை - இர்பான் பதான் பளீச்!
மும்பை அணியின் வீரர்களே பாண்ட்யாவை கேப்டனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.
பாண்டியா
நடப்பாண்டில் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களை குவித்தது.
இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆடியது. கொல்கத்தாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறிய மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 18.5 ஓவர்களில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்களை குவித்து படுத்தோல்வி அடைந்தது.
இதனால் 12 வருடங்கள் கழித்து மும்பையை அதன் சொந்த மண்ணில் கொல்கத்தா தோற்கடித்தது. மறுபுறம் 11 போட்டிகளில் 8-வது தோல்வியை பதிவு செய்த மும்பை பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளது.ரோகித் சர்மாவுக்கு மாற்றாக கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா தலைமையிலான முதல் வருடத்திலேயே லீக் சுற்றுடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இர்பான் பதான்
இந்நிலையில் ரசிகர்களை தாண்டி முதலில் மும்பை அணியின் வீரர்களே ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று இர்பான் பதான் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் கதை முடிந்துள்ளது. பேப்பரில் அவர்கள் நல்ல அணியாக இருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் சிறப்பாக வழி நடத்தப்படவில்லை. ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்ஷிப் பற்றிய கேள்வி செல்லுபடியாகும். இன்று கொல்கத்தா 57/5 என தடுமாறியபோது 6-வது பவுலரை பயன்படுத்திய நீங்கள் ஹர்திக் பாண்ட்யா) மனிஷ் பாண்டே மற்றும் வெங்கடேஷ் ஐயரை வைத்து கொல்கத்தா முக்கிய பார்ட்னர்ஷிப் உருவாக்க விட்டீர்கள்.
150 ரன்கள் எடுத்திருக்க வேண்டிய கொல்கத்தா அந்த 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் காரணமாக 170 ரன்கள் எடுத்தது. இதுதான் வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் மற்றும் அணி நிர்வாகம் முக்கியமாகும். தற்சமயத்தில் மும்பை ஒரு அணியாக இணைந்து விளையாடவில்லை.
அதுவே இந்த வருடம் அவர்கள் கற்க வேண்டிய பாடமாக அமைந்தது. அனைத்து வீரர்களும் உங்களுடைய கேப்டனை ஏற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். இந்த வருடம் மும்பை அணியில் அது நடந்ததாக எனக்கு தெரியவில்லை இவ்வாறு கூறியுள்ளார்.