அதானி விவகாரத்தில் பணம் பெற்றேனா? இது டிகிரியை கேட்டதற்கு வாங்கும் பழி - கொந்தளித்த எம்பி மஹுவா மொய்த்ரா!
எம்பி மஹுவா மொய்த்ரா மீது பணம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதானி விவகாரம்
அதானி விவகாரம் குறித்து மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் பெரிய தொகையை பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விசாரணைக் குழு ஒன்றை அமைத்திட வேண்டும் என நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எம்பி திட்டவட்ட மறுப்பு
அதில், 'லோக்சபாவில் மஹுவா மொய்த்ரா இதுவரை கேட்டுள்ள, 61 கேள்விகளில், 50 கேள்விகள், அதானி குழுமம் தொடர்பானவை. இந்த கேள்விகளை எழுப்ப, மற்றொரு நிறுவனத்திடம் இருந்து அவர் லஞ்சம் வாங்கியுள்ளார்.
இது தொடர்பான ஆதாரங்கள் உள்ளன' எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பாஜகவைச் சேர்ந்த வினோக் குமார் சோன்கர் தலைமையிலான, லோக்சபா ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஆய்வுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், புகாரை ஒழுங்கு நடவடிக்கை குழு அக்.,26ல் விசாரிக்கவுள்ளது. இதற்கிடையில், தன் மீது பாஜக எம்பி நிஷிகாந்த் துபே சுமத்திய குற்றச்சாட்டுகளை மஹுவா மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, ஜெய் ஆனந்த் தெஹத்ராய் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்ட கல்வி தகுதிகளின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்த வேண்டும் என கடந்த மார்ச் மாதம் தெரிவித்து இருந்தார். எனவே அவர் மீது பழிவாங்கும் நோக்கில் குற்றம்சாட்டி உள்ளனர் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.