இறந்து அழுகிய நிலையில் கிடந்த மாமியார்-மருமகன்; 7 நாட்கள் சடலத்துடன் இருந்த தாய்!
இறந்து, அழுகிய நிலையில் கிடந்த மாமியார்-மருமகன் உடல்களை புதைக்க பணமில்லாமல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த மாமியார்-மருமகன்
ஈரோடு, குமணன் வீதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம்(74). இவருடைய மனைவி சாந்தி(61). இவர்களுக்கு சசிரேகா என்ற மகளும், சரவணக்குமார் என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆன நிலையில், சாந்தியின் தாயாரும் அவர்களுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
மேலும், வயது மூப்பு காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் உடல் நலம் குன்றியுள்ளது. ஆனால், போதிய வருமானம் இல்லாமையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். தொடர்ந்து, கோவில் மற்றும் வெளி இடங்களுக்கு சென்று இலவசமாக கிடைக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு வந்து உள்ளனர்.
சடலத்துடன் இருந்த தாய்
இந்நிலையில், மோகனசுந்தரமும், கனகாம்பாளும் இறந்துவிட்டனர். மேலும், இறந்த உடல்களுடன் சாந்தி தனது மகனுடன் வீட்டிலேயே இருந்துள்ளார். அதனால், அதிக அளவில் துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த போலீஸார்,
உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், 'வறுமை, உடல் நலம் பாதிப்பு, சரியான நேரத்தில் உணவு கிடைக்காமை போன்ற காரணத்தால் கடந்த 7 நாட்களுக்கு முன்பு மோகனசுந்தரமும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனகாம்பாளும் இறந்து உள்ளனர்.
மேலும் இறந்தவர்களின் உடல்களை புதைக்க தன்னிடம் பணம் இல்லை. அதுமட்டுமின்றி இதுகுறித்து பக்கத்து வீட்டில் உள்ள யாரிடமும் கூறி உதவி கேட்க மனம் இல்லை. இதனால் 7 நாட்கள் நானும், எனது மகனும் இறந்த உடல்களுடன் இருந்துவிட்டோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.