இனி பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் புதிய கட்டணம் - நோட் பண்ணுங்க
பிற வங்கி ஏடிஎம் இல் பணம் எடுப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி
வங்கிகளில் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் விதிக்கப்படுகிறது.
அதேபோல, தங்களுடைய வங்கி அல்லாத மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இருந்து பெருநகரங்களில் ஒரு மாதத்துக்கு 3 முறையும், கிராமப்புறங்களில் 5 முறையும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்நிலையில், இந்தியன் வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டண விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விதிமுறை
அதில், இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்ட தடவை பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அனுமதிக்கப்பட்ட தடவைகளை தாண்டி பிற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் ரூ. 21 மற்றும் ஜி.எஸ்.டி. வரியாக 3 ரூபாய் 78 காசுகள் சேர்த்து 24 ரூபாய் 78 காசுகள் தற்போது வசூலிக்கப்படுகிறது.
ஜூலை 1 ஆம் தேதிக்குப் பிறகு இந்த கட்டணம் ரூ.2 அதிகரித்து 26 ரூபாய் 78 காசுகள் என்ற அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு அல்லாத மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுத்தால், நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் அந்த வங்கிகளுக்கு தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேவை ஆற்றியதற்காக ஏடிஎம் உள்பரிமாற்ற கட்டணங்களைச் செலுத்தும்.
அதற்காகத்தான் பிற வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தனியார் வங்கிகளும் மற்ற வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வை ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.