எதிர்பார்த்தது தான்.. இந்த கொடுமைகள் இன்னும் பல அரங்கேறும் - மு.க.ஸ்டாலின் காட்டம்!
அமலாக்கத்துறை சார்பில் போகப்போக இன்னும் பல கொடுமைகள் அரங்கேறும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
பெங்களூரில் 2 நாட்கள் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பயணம் சிறப்பாக இருந்தது.
வெற்றிகரமாக அமைந்தது. இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், மதசார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் நலன் இவையாவும் இன்றைக்கு மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வாதிகாரம், ஒற்றை தன்மை ஏதேச்சதிகாரம், அதிகார குவியலில் சிக்கி இந்த நாடே சிதையுண்டு போய்க்கொண்டு இருக்கிறது.
எதிர்பார்த்தது தான்..
மத்தியில் ஆட்சியில் இருக்கும் அப்படிப்பட்ட பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும், நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இருக்கிறது. பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் 16 கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பெங்களூரு கூட்டத்தில் 26 கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள். தமிழகத்தில் எப்படி ஒரு கூட்டணி அமைந்து தொடர் வெற்றிகளை பெற்றுவருகிறோமோ, அதேபோல இந்தியா முழுமையும் இதுபோல ஒரு கூட்டணி அமைந்து, அந்த வெற்றியை காண வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் கொள்கை கூட்டணியாக, மாநில அளவில் தேர்தல் கூட்டணியாக இது அமையக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
பாட்னா, பெங்களூரு கூட்டங்களை பொறுத்தவரையில் எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது.
அமலாக்கத்துறையின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் இதெல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான். இன்னும் போகப்போக பல கொடுமைகள் நடக்கும். அதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதிலும் நிச்சயம் வெற்றி காண்போம். எல்லாவற்றையும் சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் எனக் கூறினார்.