இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
கிரீம் பண்ணுக்கு எவ்வளவு வரி என்று கேட்க கூட உரிமை இல்லாத நிலை உள்ளது என ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக முப்பெரும் விழா
பேரறிஞர் அண்ணா பிறந்த விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா என திமுகவின் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது.
இதில் 'கழகம் நல்ல கழகம்’ என்ற பாடலுடன் தனது உரையை தொடங்கினார் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
ஸ்டாலின்
இதில் பேசிய அவர், "தொண்டர்களுடைய வேர்வை, ரத்தம், மூச்சுக்காற்றால் தான், இத்தனை ஆண்டு காலம் திமுக தலை நிமிர்ந்து, கம்பீரமாக நிற்கிறது. நீங்கள் இல்லாமல், திமுக இல்லை, நீங்கள் இல்லாமல் நான் இல்லை. தமிழ்நாடும் திமுகவும் எனது இரு கண்கள்.
ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக இருப்பது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு முழுமுதற் காரணம் நம்முடைய அமைப்பு தான் எஎன்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன். 1977ம் ஆண்டு தேர்தலில் திமுக தோல்வி அடைந்த போது திமுக முடிந்தது என சொன்னார்கள்.
வெள்ளி விழா மற்றும் பொன்விழாவின் போது தி.மு.க ஆட்சியில் இருந்தது. தற்போது பவள விழாவின் போது தி.மு.க ஆட்சியில் இருக்கிறது. அடுத்து நூற்றாண்டு விழாவிலும் தி.மு.க ஆட்சியில் இருக்கும். தி.மு.க-வின் தேவை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருக்கிறது. எந்தவொரு மாநிலமும் செய்யாத அளவுக்கு, ஏரளமான நெருக்கடிக்கு மத்தியில் தமிழகத்தை வளமிக்க மாநிலமாக தி.மு.க அரசு மேம்படுத்தியிருக்கிறது.
மாநில உரிமை
மாநில உரிமைகளை வழங்குகிற மத்திய அரசு அமையவில்லை. நிதி உரிமைகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு நாம் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் தான் தமிழ்நாட்டை எல்லா விதத்திலும் முன்னேற்ற வேண்டும் என்கிற ஒற்றை இலக்கோடு திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
கலைஞர் எளிமையாக சொன்னார், நம்ம கோட்டையில் இருந்தாலும் அங்கு இருக்ககூடிய புல்லை வெட்ட வேண்டும் என்றால் கூட நமக்கு உரிமை இல்லை. மேலே அனுமதி வாங்க வேண்டும். இன்றைக்கு கிரீம் பண்ணுக்கு எவ்வளவு வரி? என்று கேட்க கூட உரிமை இல்லாத நிலை உருவாகியிருக்கு.
2026 தேர்தல்
மாநில சுயாட்சியை வென்று எடுப்பதற்கான அறிவிப்பு தான் திமுகவின் பவள விழா. அதிகாரம் கொண்ட மாநில அரசுகளை மாற்றுகிற வகையில், அரசமைப்பில் திருத்தம் கொண்டு வரும் முன்னெடுப்புகளை திமுக செய்யும்.
இனிவரும் தேர்தல்களிலும் திமுக வெற்றி பெறும். ஆணவத்தில் சொல்லவில்லை, உங்கள் மீது உள்ள நம்பிக்கையில் சொல்கிறேன். அடுத்த நம்முடைய இலக்கு 2026 சட்டப்பேரவைத் தேர்தல். இதுவரைக்கும் எந்த ஒரு கட்சியும் இப்படி ஒரு வெற்றியை பெற்றதில்லை என்பதை 2026 தேர்தல் சொல்ல வேண்டும்" என பேசினார்.