'எரியுதுடி மாலா.. ஃபேன போடு' என்று பாஜக கதறுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
வளர்ச்சி அடைந்த நாடு உருவாக இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம்
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் சிதம்பரம் மக்களவை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன்,
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் "2, 3 தலைமுறைகளாகத்தான் நம் வீடுகளிலிருந்து இன்ஜினியர்கள், டாக்டர்கள் வருகிறார்கள்.
கண்களை உறுத்துகிறது
முன்பெல்லாம் அத்திப்பூத்தாற்போல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உருவாவார்கள். இப்போது அப்படியல்ல. இப்போது நிறைய பேர் பதவிக்கு வருகின்றனர். இதெல்லாம் பாஜக-வின் கண்களை உறுத்துகிறது.
'இந்த வேலைக்கு இவர்களெல்லாம் வந்துடறாங்களே' என நினைக்கிறார்கள். 'எரியுதுடி மாலா.. அந்த ஃபேனை போடு' என கதறுவார்கள். இட ஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து, நம்முடைய குழந்தைகள் படித்து வேலைக்குச் செல்வதை கெடுக்க, என்ன என்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்கிறார்கள்.
இப்படிப்பட்ட பாஜகவுடன்தான் - பாமக கூட்டணி அமைத்துள்ளது. இந்தியா கூட்டணி, மக்களுக்கான கூட்டணி. இந்தியா கூட்டணிதான், சமூக நீதி கூட்டணி. வளர்ச்சி அடைந்த நாடு உருவாக இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்" என்றார்.