தமிழகத்தையே காக்க முடியல.. இதில் இந்தியாவை காக்கப் போறாராம் ஸ்டாலின் - ஈபிஎஸ் தாக்கு!
தி.மு.க ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
ஈரோடு மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் அசோக்குமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கஸ்பாபேட்டையில் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் "கடந்த கால அ.தி.மு.க ஆட்சியை இருண்ட காலம் என்று ஸ்டாலின் சொல்கிறார். நாங்கள் 10 ஆண்டுக்காலமாக செய்த சாதனைகளை சொல்கிறோம். அவர்கள் 3 ஆண்டு தி.மு.க ஆட்சியின் சாதனைகளைச் சொல்லட்டும்.
யார் ஆட்சி சிறந்தது என மக்களே தீர்ப்பளிக்கட்டும். அ.தி.மு.க செயல்பாடை முடக்க முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டுமென்றே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
எங்கே போனது?
காலச் சக்கரம் சுழலும் என்பதை ஸ்டாலின் உணர வேண்டும். அ.தி.மு.க ஆட்சி மீண்டும் வந்தவுடன் ஸ்டாலின் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். தமிழகத்தையே முதல்வர் ஸ்டாலினால் காக்க முடியவில்லை.
இதில் இந்தியாவை காக்க வருவதாக ஸ்டாலின் கூறுகிறார். தி.மு.க ஆட்சிமீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான், தி.மு.க பெயரை உபயோகிக்காமல் இந்திய கூட்டணி என்று புதிய நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் ஸ்டாலின்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது, ஊர் ஊராகச் சென்று பெட்டி வைத்து மனுவை ஸ்டாலின் வாங்கினார். ஆட்சிக்கு வந்த பிறகு அந்த மனுக்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை?" என்று பேசியுள்ளார்.