அதெல்லாம் பகல் கனவு; ரெய்டு மூலமா திமுகவை அச்சுறுத்த முடியாது - பாஜகவை சாடிய முதலமைச்சர்!
அதிமுகவை மிரட்டியது போல திமுகவை மிரட்ட முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூரில், சென்னை மண்டல திமுக பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று பேசினார்.
அப்போது, “மருத்துவர்கள் அறிவுரையால் நீண்ட நேரம் பேச முடியாது என்பதால் எனது உரையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசிப்பார்” எனக் கூறினார்.
பகல் கனவு
அதன்படி, உரையை வாசித்த உதயநிதி ஸ்டாலின், அதிமுகவைப் போன்று திமுகவையும் அச்சுறுத்தலாம் என பாஜக பகல் கனவு காண்கிறது. இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது. ரெய்டுகள் மூலமாக அதிமுகவை மிரட்டி நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல் நம்மையும் மிரட்டலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள்;
இந்த சலசலப்புகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் அஞ்சுகின்ற இயக்கம் அல்ல திமுக. வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் கண்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும் தெரியும் ரகசியம் என்ன? பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அவரவர் அலுவலகங்களை விட்டுக்கூட வெளியே வராதது ஏன்?
அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் Conviction Rate 1 விழுக்காடு கூட இல்லையே ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அவர் , பாஜகவின் கூட்டணி கட்சிகளாக வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் செயல்படுகிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகாத்தான வெற்றி பெற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாடுபட வேண்டும். அதிமுக, பாஜக மற்றும் அதன்கூட்டணிக் கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.