எடப்பாடி பழனிசாமி ஜோசியராக மாறி விட்டார் - முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு
கூட்டணியில் விவாதம் ஏற்படுமே தவிர விரிசல்கள் ஏற்படவில்லை என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
எடப்பாடி ஜோதிடம்
திமுக முன்னாள் எம்.எல்.ஏ கி.வேணுவின் இல்ல திருமண விழா சென்னை அண்ணா அறிவாலய அரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
அதன் பின் அவர் ஆற்றிய உரையில், "திமுக, கூட்டணி உடையப்போகிறது என்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் கற்பனையில் இருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் எப்போது ஜோதிடர் ஆக மாறினார் என தெரியவில்லை.
கூட்டணியில் விரிசல் இல்லை
திமுக கூட்டணி என்பது பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. எங்களுடைய கூட்டணி கொள்கை கூட்டணி என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. கூட்டணிக்குள் பல விவாதங்கள் ஏற்படுகிறதே தவிர, விரிசல்கள் ஏற்படவில்லை.
பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனித்துக் கொண்டிருப்பார்களே அதுபோல பக்கத்து கட்சியில் என்ன பிரச்சனை என எடப்பாடி பழனிசாமி பார்த்துக்கொண்டிருக்கிறார்.
சென்னையில் மழை வந்தபோது சேலத்துக்கு ஓடிச் சென்று ஒளிந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் களத்தில் நின்றனர். திமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தாலும் மழைக்காலத்தில் மக்களை சந்தித்தோம். 2026 மட்டுமல்ல, அதற்குப் பின் வரும் அனைத்துத் தேர்தல்களிலும் திமுகவே ஆட்சிக்கு வரும்" என பேசினார்.